வாஷிங்டன்: அமெரிக்கர்கள் வெளியே வரும் போது துணியால் தைக்கப்பட்ட முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்க மக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் துணியால் செய்த முகக்கவசங்களை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது உலகத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கால் பங்காகும்.
கரோனா பாதித்தவர்களிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அமெரிக்க மருத்துவமனைகளும், மருத்துவர்களும் திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் துணியால் ஆன முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ முகக் கவசங்களை பயன்படுத்துமாறும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் மருத்துவ ரீதியிலான முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படவில்லை. சாதாரண துணியால் செய்த முகக்கவசங்களைப் பயன்படுத்தினாலே போதுமானது என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் அதே சமயம், இந்த பரிந்துரையை ஒருபோதும் தான் பின்பற்ற மாட்டேன், முகக்கவசம் அணிய மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.