லண்டன்: கரோனா தொற்றினால், உலகப் போருக்கு நிகரான சூழ்நிலையை நாடு எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக தனது உரையை நிகழ்த்தினார்.
பிரிட்டனில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. உலக அளவில் இது 70 ஆயிரத்தை தொட்டுவிட்டது.
இந்த நிலையில் மிகவும் அரிதான நிகழ்வாக ராணி எலிசபெத், தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
கரோனா தொற்றினால், உலக நாடுகள் பலவும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆட்பட்டு, பல உயிர்களை இழந்து, பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான நேரத்தில் இருக்கிறோம். பொதுவான பிரச்னையை எதிர்கொண்டுள்ளோம் என்று பிரிட்டிஷ் ராணி கூறினார்.
இந்த கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நிமிட நேரம் பதிவு செய்யப்பட்ட ராணி எலிசபெத்தின் உரை நேற்று இரவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த பேரிடரை எதிர்கொண்டு வெற்றி கண்டபின், இதுவரை நாம் கண்டிராத ஒரு பலமான தலைமுறையாக இருக்கும் என்று சொல்லலாம். சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி இந்த பேரிடரை நாம் வெற்றி கொள்வோம். நமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு கடுமையான நேரம் இது. சிலருக்கு இது துக்கத்தையும் சிலருக்கு பொருளாதார இழப்பையும் மிகப்பெரிய வலியையும் ஏற்படுத்தியுள்ளது.
சவாலான நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயம் அந்த நல்ல நாட்கள் மீண்டும் வரும், நாம் நமது நண்பர்களை மீண்டும் சந்திப்போம், நமது குடும்பத்துடன் நாம் இணைவோம், மீண்டும் சந்திப்போம் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, ‘நாம் நிச்சயம் வெல்வோம்' என்று உரத்தக் குரலில் சொல்லியிருக்கிறார்கள்.