முகப்பு
உலகம்

கேரளத்தில் மகனின் இறுதிச் சடங்கை சௌதியில் இருந்து ஃபேஸ்புக் மூலம் பார்த்த பெற்றோர்

புற்றுநோயால் மரணம் அடைந்த தனது மகனுக்கு கேரளத்தில் நடந்த இறுதிச் சடங்கை சௌதியில் இருந்த பெற்றோர் ஃபேஸ்புக் விடியோ மூலம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:


ஷார்ஜா: புற்றுநோயால் மரணம் அடைந்த தனது மகனுக்கு கேரளத்தில் நடந்த இறுதிச் சடங்கை சௌதியில் இருந்த பெற்றோர் ஃபேஸ்புக் விடியோ மூலம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

2004-ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பிறந்த ஜியோல் தனது பெற்றோருடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜியோலை 7 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதித்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை - புனித வெள்ளியன்று உயிரிழந்தார். 

ஜியோல், உடல்நிலை மோசமானதை அடுத்து 2 வாரங்களுக்கு முன்பு துபையில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

16 வயதைத் தொட பத்து நாட்களே இருந்த நிலையில், தங்களது மூத்த மகனை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த கேரளத்தைச் சேர்ந்த பெற்றோர், மகனின் உடலை சொந்த மண்ணில் புதைக்க விரும்பினர். இதற்காக அவனது உடலை கேரளம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கரோனா தொற்று காரணமாக உடன் பெற்றோர் செல்ல முடியாத நிலையில், கார்கோ விமானம் மூலம், ஜியோலின் உடல் விமானத்தில் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விமானத்தில் மகனின் உடலுடன் அவரது தந்தை உடன் செல்ல விரும்பினார். ஆனால், விமானத்தில் யாரும் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதனால், ஜியோலின் உடல் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, ஷார்ஜாவில் உள்ள அவர்களது இல்லத்தில் ஜியோலின் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் ஜியோலின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். இந்த இறுதிச் சடங்கினை யூடியூப் நேரலை மூலம் கேரளத்தில் இருந்த ஒட்டுமொத்த குடும்ப உறவினர்களும் பார்த்தனர்.

பிறகு  உடல் கேரளம் வந்ததும், பத்தனம்திட்டாவில் உள்ள அவர்களது வீட்டிலும், தேவாலயத்திலும் நடைபெற்ற இறுதிச் சடங்கு சுமார் 4 மணி நேரம் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனை சுமார் 10 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

மகனின் இறப்பு பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தாலும், அவனது உடல் தங்களது சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது சற்று ஆறுதலை அளித்திருக்கும் என்கிறார் அவரது உறவினர்.

முழு கட்டுரையைப் படிக்க →