பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, இம்ரான் கானுக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல கொடையாளர் அப்துல் சதார் எதியின் மகனும், எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி, ஏப்ரல் 15-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து கரோனா நிவாரணத் தொகையாக ரூ. 1 கோடி வழங்கியிருக்கிறார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து, பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுத்தலுக்கேற்ப, பிரதமர் இம்ரான் கானுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷவுகத் ஹானும் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு பிரதமரிடம் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது. பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.
'ஒரு பொறுப்புள்ள பிரதமர் மற்றும் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் எங்களது ஆலோசனையின் பேரில் பிரதமர் பரிசோதனை செய்ய ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்' என மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை மேற்கொள்ளப்படுவதன் காரணமாக பிரதமர் இம்ரான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி, 9,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 209 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.