உலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியைக் கொண்டு கண்டுபிடிக்கும் பயிற்சியை நாய்களுக்கு அளித்து வருகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நாய்களுக்கு கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியுடன் அறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 8 மோப்ப நாய்களுக்கு, கரோனா தொற்று பாதித்தவர்களை, தங்களது மோப்ப சக்தி மூலம் கண்டறியும் பயிற்சியை அளித்து வருகிறார்கள்.
இதேப்போன்ற முயற்சியை லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருந்தியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இதேப்போன்று மலேரியா தொற்று பாதித்தவர்களை நாய்களைக் கொண்டு கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த சோதனை முறை வெற்றி பெற்றால், கரோனா தொற்று பாதித்தவரக்ளைக் கண்டறியும் மிகப்பெரிய பணி எளிதாக்கப்படும், குறிப்பாக விமான நிலையங்கள், தொழிலகங்கள், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை எளிதாகக் கண்டறியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் நாய்கள் வெற்றி பெற்றால் அது ஒன்றும் அவ்வளவுபெரிய ஆச்சரியமில்லை என்றும், ஏற்கனவே போதைப் பொருட்கள், வெடிபொருட்களை மோப்ப சக்தியுடன் கண்டறிவதோடு, மலேரியா பாதித்தவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோரைக் கண்டறியும் திறனையும் மோப்ப நாய்கள் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தொற்றுக்கும் நிச்சயம் ஒரு வாசனை இருக்கும். அந்த வாசனை என்ன என்பது தெரியாது. ஆனால், அது பற்றி எல்லாம் நாய்களுக்குக் கவலை இல்லை. அவைகள் ஒன்றைத்தான் பின்பற்றுகின்றன, ஏதோ ஒன்று வேறுபடுகிறது என்பதே அது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.