கரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது.
பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது.
கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி தயாரிப்பதில் சீனா, இந்தியா, கனடா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையும் ஒருபக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொதுநிதியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வழங்கியது.
இந்நிலையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசியை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
ஜப்பான் தற்போது அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.