குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு: பாகிஸ்தான் அவையில் தீர்மானம்
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை அளிப்பதற்கு வழி செய்யும் தீர்மானம் வெள்ளியன்று பாகிஸ்தான் அவையில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமாபாத்: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை அளிப்பதற்கு வழி செய்யும் தீர்மானம் வெள்ளியன்று பாகிஸ்தான் அவையில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மத் கான் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தணடனைகளை அதிகப்படுத்துவதால் குற்றங்கள் குறையாது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக பொதுவெளியில் தூக்கிவிடும் முறையை நாம் கொண்டு வர இயலாது என்று தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரியும் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துளார்.
இந்த மாறுபாடான கருத்துகளின் இடையே, இந்தத் தீர்மானம் அரசால் கொண்டு வரப்பட்டதில்லை என்றும், தனி நபர் முன்மொழிந்த தீர்மானம் என்றும் , மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
பாக்சிதானில் குழந்தைகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் அமைப்பான சஹில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான 1304 பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் ஊடகங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.