கோவைட்-19 ஆராய்ச்சியில் கிடைத்த மகிழ்ச்சி தரும் தகவல்
கரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவைட் - 19 தொற்று பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.
பெய்ஜிங்: கரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவைட் - 19 தொற்று பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.
அதாவது, தாயிடம் இருந்து கரோனா வைரஸ் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பரவாது என்பதே அது.
தி லான்சென்ட் இதழில் இது பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாய்க்கு கோவைட்-19 தொற்று இருந்தாலும், அவரது வயிற்றில் இருக்கும் கருவுக்கு இந்த வைரஸ் பரவுவது உறுதி செய்யப்படவில்லை. கடந்த 9 பிரசவங்களின் மூலம் இது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பிறந்த 36 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தைக்கு கோவைட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தொடர்பாகவும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், பல மருத்துவ தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போதே இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை என்றும் வூஹான் பல்கலையின் ஆராய்ச்சியளார் யான்சென் சாங் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், கோவைட்-19 வைரஸ் பாதித்த தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதீத கவனம் செலுத்தப்படுவதாகவும் சாங் கூறியுள்ளார்.