கரோனாவைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒரு ஆண்டு வரை ஆகலாம்
கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லி: கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த நிலையில் கரோன வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யாங் கூறியிருப்பதாவது, கரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதனை விலங்குகளுக்குக் கொடுத்து சோதனை செய்து முடிக்க நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். அதன்பிறகு, மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் மனிதர்களுக்கு அதனை செலுத்தி ஆராய்ச்சி செய்ய மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம்.
அப்படியே அது கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உற்பத்தி செய்து, உரிமம் பெற்று, விற்பனைக்கு வர கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆகும் என்று யாங் கூறியுள்ளார்.
தற்போதைக்கு, அந்தந்த சுகாதாரத் துறை அறிவுறுத்தும் விஷயங்களை பொதுமக்கள் தயவுகூர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் யாங் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது கரோனாவைரஸ். தற்போது வரை இந்நோய்க்கு 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா உட்பட 24 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது.