கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவு
கரீபியன் கடலில் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று
ஹவானா: கரீபியன் கடலில் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கியூபாவிற்கு இடையிலான பாக் ஜலசந்தியில் அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 -க்கு நேரிட்டது. இது 7.7 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜமைக்காவின் லூசியாவிலிருந்து வடமேற்கில் 72 மைல் தொலைவிலும், கியூபாவின் தென்மேற்கில் 87 மைல் தூரத்திலும் 6.2 மைல் ஆழத்திலும் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரீபியன் தீவுகள் உள்பட மெக்சிகோவிலிருந்து ப்ளோரிடா வரை அனைத்து பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கியூபா, ஜமைக்கா மற்றும் கேமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கேமன் தீவுகளில் பல சாலைகள் தண்ணீரால் மூழ்கிப்போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்களுக்குச் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.