சிங்கப்பூர்மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று
சிங்கப்பூரில் மேலும் 246 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில் 243 பேர், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளர் குடியிருப்புகளில் தங்கியுள்ளவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் புறநகர் பகுதிகள் முடக்கம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் 2-ஆவது பெரிய நகரமான மெல்போர்னில் ஒரே நாளில் 233 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதன் 36 புறநகர்ப் பகுதிகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹ்ரைன் தனியார் ஊழியர்களுக்கு அரசு 50% ஊதியம்
துபை: பஹ்ரைனில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் 50 சதவீதத்தை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்துள்ளது. மற்ற வளைகுடா நாடுகளைப் போலவே, பஹ்ரைனிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே பெரும்பான்மையாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கட்டாயம் ஆகிறது முகக் கவசம்
அமெரிக்காவின் ஆரகன் மாகாணத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த மாகாணம் முழுவதும் பொது உள்ளரங்குகளுக்கு முகக் கவசம் அணிந்து வருவதை கட்டாயமாக்கி மாகாண ஆளுநர் கேட் பிரௌன் உத்தரவிட்டுள்ளார். எனினும், பிற மாகாணங்களைப் போல் வணிக மையங்களை மூடும் திட்டமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் 2,09,337-ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,846 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,337}ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,304 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்து தீ விபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலி
எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினர். அவர்கள் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த தீவிபத்துக்கு மின்கசிவு காரணம் என்று கூறப்பட்டாலும், இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.