யங்கோன்: மியான்மர் பச்சை நிற மாணிக்கக் கல் சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கிய 113 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஹபாகந்த் நகர்பகுதியில் அமைந்துள்ளது மரகதப்பச்சைக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று காலை விபத்து நேரிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்தில் சுமார் 304 மீட்டர் உயர மண்பகுதி அப்படியே பெயர்ந்து சுரங்கத்துக்குள் விழுந்ததில், சுரங்கத்துக்குள் பச்சை நிற மாணிக்கக் கற்களை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இதே பகுதியில் நவம்பர் 2015-ம் ஆண்டு சுரங்கத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 116 தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். உலகிலேயே பச்சை நிற மாணிக்கக் கற்கள் மிகப்பெரிய அளவில் கிடைக்கும் பகுதியாக மியான்மர் உள்ளது. இதில் ஹாபகாந்த் பகுதிதான் பச்சை நிற மாணிக்கக் கற்கள் வெட்டி எடுக்கும் மிகப்பெரிய சுரங்கத்தைக் கொண்டிருக்கிறது.
மழைக் காரணமாக சுரங்கப் பகுதி முழுவதும் நீர் தேங்கியிருந்த நிலையில், மரகதப்பச்சை கல் சுரங்கத்தில் காலை 8 மணியளவில் மணல் சரிந்து விழுந்தது. ஈரமான நிலப்பரப்பு அதன் எடை கூடியதால் சுரங்கப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 113 தொழிலாளர்கள் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.