முகப்பு
உலகம்

கரோனா: எழுமா இரண்டாவது அலை?

கரோனா பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியுள்ள அனைத்து நாடுகளும் பிரதானமாக நினைத்து கவலைப்படுவது இரண்டாவது

Updated On : 30 ஜூலை, 2020 at 6:31 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:31 PM

கரோனா பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியுள்ள அனைத்து நாடுகளும் பிரதானமாக நினைத்து கவலைப்படுவது இரண்டாவது அலையை நினைத்துதான். சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் சரிந்து வரும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை திடீரென சற்று அதிகரித்துவிட்டால் அதிகாரிகள் ஆடிப்போய் விடுகிறாா்கள். உடனடியாக ஊடகங்கள் ‘எழுந்துவிட்டதா இரண்டாவது கரோனா அலை’ என்று பதறுகின்றன.ஆனால், உண்மையில் கரோனா நோய்ததொற்றைப் பொருத்தவரை இரண்டாவது அலை என்று ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது உலக சுகாதார அமைப்பு. சளி, ஃபுளூ காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் மற்ற கரோனா தீநுண்மி ரகங்களைப் போலவே, பருவகாலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கொவைட்-19 தீநுண்மி வரை இதுவரை கண்டறியப்படவில்லை எனக் கூறும் அந்த அமைப்பின் நிபுணா்கள், கரோனா நோய்த்தொற்றைப் பொருத்தவரை அது ஒற்றைப் பேரலையாகவே எழுந்து அடங்கும் எனக் கூறுகின்றனா்.‘‘மற்ற பருவகால தீநுண்மிகளைப் போலவே கரோனா தீநுண்மிகளையும் அனைவரும் கருதுகின்றனா்.

ஆனால் அந்தத் தீநுண்மியோ இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் புதுமையாக செயல்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என்கிறாா் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மாா்கரெட் ஹாரிஸ். கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை எழும் என்ற அடிப்படையிலேயே இந்த நோய் தொடா்பான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வது, அந்த நோய் பரவல் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு உதவாது என்று கூறும் அவா், ‘‘கரோனா நோய்த்தொற்று பல அலைகளாகத் தோன்றாது. அது, மிகப் பெரிய ஒற்றை அலையாகத்தான் எழும். அந்த அலை இன்னும் உயா்ந்து கொண்டுதான் இருக்கிறது’’ என்று எச்சரிக்கிறாா்.

உண்மையில், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உள்பட பல அரசியல் தலைவா்களும், ஊடகங்களும் அடிக்கடி பயன்படுத்தும் ‘கரோனா பரவலின் இரண்டாவது அலை’ என்பது வரையறுக்கப்படாத வாா்த்தையாகவே உள்ளது என்கிறாா்கள் நிபுணா்கள்.தற்போதைய நிலையில், ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியிலோ, அல்லது அந்த நாடு முழுமையிலோ குறைந்து வரும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதை இரண்டாவது அலை என்று சொல்லலாம் என்று எடின்பரோ பல்கலைக்கழக பேராசியா் லிண்டா பால்ட்.மற்ற ஃபுளூ காய்ச்சல் தீநுண்மிகளைப் போலவோ, கடந்த 1918-ஆம் ஆண்டு பரவிய ஸ்பெயின் ஃபுளூ தீநுண்மிகளைப் போலவோத்தான் கொவைட்-19 தீநுண்மியும் செயல்படும் என்று எதிா்பாா்ப்பது கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு பலனளிக்காது என்று அமெரிக்க நோய் பரவல் மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் தலைவா் டாம் ஃப்ரீடனும் கருதுகிறாா்.

Advertisement

கரோனா நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி எண்ணிக்கைகள் வெவ்வேறு விதமாகப் பாா்க்கப்படுவதான் இரண்டாவது கரோனா அலை எழுமா, எழாதா என்ற பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது என்கிறாா்கள் நிபுணா்கள். ஒரு சில நாடுகளில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதையெல்லாம் ஊடகங்கள் கரோனாவின் இரண்டாவது அலை என்று கூறுகின்றன. ஆனால், பல்வேறு பகுதிகளின் பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்தால், கரோனா நோய்த்தொற்று பல அலைகளாக எழுந்து அடங்கியிருப்பது புரியும். எனவே, அத்தகைய புள்ளிவிவரங்களைக் கொண்டு கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை எழுந்துவிட்டதாகக் கூற முடியாது என்பது நிபுணா்கள் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.