அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு: இரண்டாவது நபர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்க்டன் : அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதேசமயம் அமெரிக்காவில் சனிக்கிழமை இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் புறநகர்ப் பகுதியான கிர்க்லாந்தில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வைரஸ் தொற்றுக்கு முதன் முறையாக பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், அவர் நியூயார்க்கைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர குறித்த வேறு எந்த விவரமும் வெளியாகவில்லை என்று எவர்கிரீன் ஹெல்த் மருத்துவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவர்கிரீன் ஹெல்த் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் நோய் தாக்குதலின் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்துள்ளார் என்று, சியாட்டில் மற்றும் கவுண்ட்டி மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.