கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இப்படியும் தப்பிக்கலாம்: இத்தாலி மனிதரின் 'அடடே' ஐடியா!
கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இத்தாலி மனிதர் ஒருவர் மேற்கொண்ட யோசனை பலரையும் ஈர்த்துள்ளது.
ரோம்: கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இத்தாலி மனிதர் ஒருவர் மேற்கொண்ட யோசனை பலரையும் ஈர்த்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 126 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் நடமாடும் மக்கள் மற்றவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தூரம் விலகியிருப்பதன் மூலம் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ ரீதியாக அறிவுரை கூறப்படுகிறது.
அதேபோல உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதுவரை 24000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 1800 பேர் மரணமடைந்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இத்தாலி மனிதர் ஒருவர் மேற்கொண்ட யோசனை பலரையும் ஈர்த்துள்ளது. அவர் கார்ட்போர்ட் பலகையில் வட்டமான ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் நடுவில் அவர் இருப்பதற்காக இடைவெளியை உண்டாக்கி, அதனை வார்கள் மூலம் தனது தோள்பட்டையில் இணைத்துக் கொண்டுள்ளார். அதனை அணிந்து கொண்டு அவர் இத்தாலி நகர் சந்தை ஒன்றில் நடமாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.