தென்கொரியா: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கரத் தீ விபத்து
தென்கொரியாவின் அல்சான் பகுதியில் உள்ள 33 அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 12-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தென்கொரியாவின் அல்சான் பகுதியில் உள்ள 33 அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 12-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவின் தென்கிழக்கில் உள்ள அல்சான் துறைமுகப் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
உடனடியாக தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் காற்றில் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் 930 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை மேல் தளங்களில் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
Advertisement
அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த 12-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ விபத்தால் ஏற்பட்ட நச்சுக் காற்றை சுவாசித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 91 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
200 தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் தேடுதல் பணியில் இறக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய பிரதமர் சங்-சி-கியுன் (Chung Sye-kyun) படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் துரிதமாக செயல்பட்டு தடுத்த அல்சான் பகுதி தீயணைப்புத்துறைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.