இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகக் கூறி அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விமானப் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. ஜூலை மாதம் ஹாங்காங் அரசு பிறப்பித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து கரோனா எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி மூன்றாவது முறையாக ஏர் இந்தியா விமானத்திற்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி அக்டோபர் 17 முதல் 31ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், “ கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஹாங்காங் கூறும் குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா பொறுப்பேற்காது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் விமானம் எடுப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கைகளிலிருந்து தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முடிவுகள் மாறுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் விஸ்தாரா விமானத்திற்கும் ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.