மாஸ்கோ: இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லையில் சீனா ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையின் போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய நிலைப்பாட்டை காட்டமான வகையில் எடுத்து வைத்துள்ளார்.
இந்திய - சீனா சர்வதேச எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அது பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் வெளிப்படையான மற்றும் மிகத் தீவிரமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.
அப்போது, எல்லை நிர்வாகத்தில் இந்தியப் படை எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையைக் கையாள்வதாகவும், நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையையும் இந்திய ராணுவம் உறுதியுடன் காக்கும் என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச எல்லையில் சீனா திடீரென அதிகப்படியான படைகளைக் குவிப்பதோ, இந்திய எல்லைக்குள் நுழைய அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபடுவதோ, இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறுவதாகும் என்றும் ராஜ்நாத் சிங் காட்டமாகக் கூறியுள்ளார்.