கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, இந்தியாவுடனான விமானப் போக்குவரத்திற்கு ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது.
கரோனா பரவல் அதிகமாகக் காணப்படும் நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு ஆஸ்திரேலிய அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதைத் தவிா்க்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் நாடுகளுடனான விமானப் போக்குவரத்தைக் குறைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து 30 சதவீத அளவுக்குக் குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தற்போது நாளுக்குநாள் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே15ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.