ஆப்கன் பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் எழக்கூடிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில், ஐ.நா.வின் பொருளாதாரத் தடை விதிப்புக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
தலிபான்களின் ஆட்சியின் கீழ், பிரிட்டன் மற்றும் நட்பு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கான ஏவுதளமாக ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக சா்வதேசக் கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியா போன்ற ஒருமித்த கருத்தைக் கொண்ட நாடுகள் மட்டுமன்றி, செல்வாக்கு மிக்க சீனா, ரஷியா போன்ற நாடுகளுடனும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.