பாதுகாப்பு காரணங்களால் பெண்கள் வேலைகளுக்கு செல்லக் கூடாது என தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில், பெண்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜபியுல்லா, "பாதுகாப்பு காரணங்களால் பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது. தலிபான்கள் மாறிவருகின்றனர். இருப்பினும், தலிபான்களுக்கு இதில் போதுமான அனுபவங்கள் இல்லை" என்றார்.
கடந்த ஆட்சியை காட்டில் இந்த ஆட்சியில் பெண்கள் விவகாரத்தில் அதிக சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வோம் என தலிபான்கள் உறுதி அளித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்தும் வகையில் தலிபான்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான தலிபான்கள் ஆட்சியில், அலுவலகத்திற்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், வீட்டிலிருந்து வெளியே வரும்போது ஆண்களின் துணையோடு தான் வர வேண்டும், முழு உடலையும் மறைக்கும் விதமாக ஆடைகளை அணிய வேண்டும் என ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி
இதற்கிடையே, பெண்களின் பாதுகாப்பை காரணம் காட்டி உலக வங்கியால் ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த ஐநா உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.