கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய பிறகு, உடைகளை அணிவது போல முகக்கவசம் அணிவது கட்டாயமாக மாறியுள்ளது. தங்களின் ஆடைகளின் வண்ணத்திற்கு ஏற்ப, பலர் முகக்கவசங்களை அணிய தொடங்கியுள்ளனர். ஆனால், பல வண்ண துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்துவதற்கு எதிராக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணியாலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தை ஒமைக்ரான் பரவல் கிளப்பியுள்ளது. இதன் காரணமாக, துணி முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு, ஒன்றுக்கு இரண்டு முறை மக்கள் யோசிக்கின்றனர்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொடக்க சுகாதார சேவைகள் துறை பேராசிரியராக பணியாற்றிவரும் டிரிஷ் கிரீன்ஹால்க் கூறுகையில், "துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் ஒன்று நல்லதாக இருக்கலாம் அல்லது மோசமாக இருக்கலாம். அது, எந்த துணியால் செய்யப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே உள்ளது
பல பொருள்களின் கலவையால் செய்யப்பட்ட இரட்டை அல்லது மூன்று அடுக்கு முகமூடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பெரும்பாலான துணி உறைகள் ஃபேஷனாக மாறிவிட்டன" என்றார். அதிக பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை உயர்த்திய நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், பொது வாகனங்கள், கடைகள், உள் அரங்குகளில் முகக்கவசம் அணிவதை பிரிட்டன் மீண்டும் கட்டாயமாக்கியது. கோடை காலத்தில், இம்மாதிரியான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பெருந்தொற்று காலம் முழுவதுமாகவே, எம்மாதிரியான முகக்கவசம் அணிய வேண்டும், உடல்நல பாதிப்புள்ளவர்கள் எந்த வகை முககவசங்களை அணிய வேண்டும் என பல்வேறு அரசுகள் பல்வேறு விதமான விளக்கங்களை அளித்துள்ளன.
இதையும் படிக்க | சீனாவுக்கு போட்டியாக அருணாசல எல்லை கிராமங்கள் மேம்பாடு திட்டம்: முதல்வர் பெமா காண்டு
"துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்திற்கு எந்த விதமான சுகாதார தரத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுவே ஒரு பிரச்னையாக உள்ளது" என்கிறார் கிரீன்ஹால்க். ஆனால், அதற்கு நேர் மாறாக, என் 95 முகக்கவசத்தை, 95 சதவிகித துகள்களை வடிகட்டி வெளியேற்றும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
முகக்கவசத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கிய கிரீன்ஹால்க், "உங்கள் மூக்கையும் வாயையும் முகக்கவசத்தை கொண்டு சரியாக மறைக்கவில்லை என்றால், வடிகட்டி வெளியேற்றுவதே பயனற்றதாக மாறிவிடும். முகக்கவசம் மூலம் நீங்கள் எளிதாக சுவாசிக்கவும் முடியும்" என்றார்.
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளும் வாடிக்கையாளர்கள், துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தை நோக்கியே செல்கின்றனர். அதை துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற காரணத்திற்காக அவர்கள் துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தை விரும்புகின்றனர். ஆனால், தரத்தை பூர்த்தி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களும் விற்பனைக்கு வந்துவிட்டன.