உரிமைக் குரலை எழுப்பும் பழங்குடியின மக்கள்...போராட்ட களமாக மாறிய ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
பழங்குடியினர்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதற்காகவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பழங்குடியின கூடார தூதரகம் என்ற இடம் ஒதுக்கப்பட்டது.
பழங்குயினர்கள் ஒடுக்கப்படுவதாகவும் அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி வளர்ச்சி அடையாத நாடுகள் வரை இந்த நிலைதான் தொடர்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினருக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்நாட்டில் வசிக்கும் பழங்குடியின அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பழங்குடியினர்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதற்காகவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பழங்குடியின கூடார தூதரகம் என்ற இடம் ஒதுக்கப்பட்டது. தேசிய அளவில் பழங்குடியினர் உரிமை குறித்து பேசுவதற்கு இது வாய்ப்பை உருவாக்கி தந்தது. இந்த இடம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
Advertisement
இதையொட்டி, தங்களின் உரிமைகளைக் கோரி பழங்குடி அமைப்பினர் அங்கு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியாவில் தங்களுக்கான உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பழங்குடியினர் குற்றம்சாட்டினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் திடீரென பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கொழுத்துவிட்டு எரியும் விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிக்க | தடையை மீறி ஈரான் ராக்கெட் சோதனை
பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்தக் கட்டிடத்தில் தான் செயல்பட்டு வந்தது. கடந்த 1998இல் தான் அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் அங்கு மாற்றப்பட்டன. அதன் பிறகு இந்த கட்டிடம் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
விபத்தின்போது, அருங்காட்சியகத்தில் இருந்த ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.