காலநிலை மாற்றத்தால் துருக்கியில் இரண்டாவது பெரிய ஏரியாக அறியப்பட்ட துஸ் ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.
துருக்கி நாட்டின் இரண்டாவது பெரிய ஏரியாக அறியப்படுவது துஸ் ஏரி. 80 கிலோ மீட்டர் நீளமும், 50 கிலோ மீட்டர் அகலமும் உடைய இந்த ஏரியானது உலகின் பெரிய உப்பு ஏரியாகவும் உள்ளது. 1665 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியானது சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்தது.
பல்வேறு அரிய பறவையினங்கள் உள்ளிட்டவற்றின் வாழ்விடமாக இருந்து வந்த இந்த ஏரியானது தற்போது வறண்ட நிலமாக மாறி காட்சியளித்து வருகிறது.
இதையும் படிக்க | ஹீரோசிமா அணுகுண்டு தாக்குதலில் சிக்கியவர் 96 வயதில் மரணம்
கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து வறண்டு போக ஆரம்பித்த இந்த ஏரியானது தற்போது நீரின்றி முழுவதுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இந்த ஏரியை நம்பி நடந்து வந்த விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
துஸ் ஏரியின் இந்த நிலைக்கு காலநிலை மாற்றமே காரணம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்து வந்த காலநிலை மாற்றம் காரணமாக எரியின் பரப்பு குறைந்தது மட்டுமல்லாமல் அதனைச் சார்ந்த பல்வேறு விலங்கினங்கள் மற்றும் பறவைகளின் வாழ்விலும் அதன் தாக்கம் பாதித்துள்ளதாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக மழைப்பொழிவில் பாதிப்பேற்பட்டது ஏரியின் அழிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக போகாசிசி பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி லெவென்ட் குர்னாஸ் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்றாவிட்டால் இத்தகைய பாதிப்புகளை உலக நாடுகள் தவிர்க்க முடியாது எனவும் சூழலியல் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள கிளாஸ்கோ பருவநிலை மாநாடு முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.