புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் கனடா நாடாளுமன்ற தேர்தலில் செவ்வாய்கிழமை வெற்றிபெற்றனர். முன்கூட்டியே நடத்தப்பட்ட தேர்தலில், லிபரல் கட்சி தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டும் என எண்ணிய ஜஸ்டின் ட்ரூடோவின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெளியான முடிவுகளே தற்போதும் எதிரொலித்துள்ளது. 156 இடங்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக லிபரல் கட்சி உருவெடுத்துள்ளது. கடந்த 2019 தேர்தலை காட்டிலும் இம்முறை ஒரு தொகுதி குறைவாக பெற்றுள்ளது.
இதையும் படிக்க | அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
கனடாவில் ஆட்சி அமைக்க 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ட்ரூடோ மூன்றாவது முறையாக வெற்றிபெற்றிருந்தாலும் முன்கூட்டியே நடத்தப்பட்ட தேர்தலால் நேரம் விரயமாகியுள்ளது என விமரிசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேட்டிவ் 122 இடங்களில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.