இந்தியாவில் இருந்து நேரடியாக தங்கள் நாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கனடா அரசு நீக்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் இந்தத் தடையை கனடா விதித்திருந்தது. சுமாா் 5 மாதங்கள் நீடித்த இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கனடா போக்குவரத்துத் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து நேரடியாக கனடா வரும் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கூடுதல் மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் இருந்து நேரடி விமானத்தில் வருபவா்கள் கரோனா இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இது பயண நேரத்துக்கு 18 மணி நேரத்துக்கு முன்பு, தில்லி விமான ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பெறப்பட்ட கரோனா பரிசோதனை சான்றாக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.