இந்தியாவில் எண்டமிக் நோயாக மாறும் கரோனா: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவில் கரோனா 'எண்டமிக்' நோயாக மாற வாய்ப்புள்ளது என்றும் குறைந்த அல்லது மிதமான அளவில் அது பரவிக்கொண்டே இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா 'எண்டமிக்' கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறைந்த அல்லது மிதமான அளவில் அது பரவிக்கொண்டோ இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டும் நோய் பரவல் தொடர்ந்து கொண்டே இருந்தால் அது எண்டமிக் எனப்படும். எண்டமிக் நோய்க்கு முடிவு என்பதே இல்லை. அதாவது மக்கள் அதனுடன் வாழக் கற்றுக்கொள்வார்கள். எடுத்துக்காட்டு: ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மலேரியா நோயின் பரவல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பேசிய செளமியா சுவாமிநாதன், "கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழுவுக்கு எந்த சிக்கலும் இல்லை. கோவாக்சின் சமர்பித்த ஆய்வுகள் குறித்து குழு திருப்திகரமாக உள்ளது என நம்புகிறேன். செப்டம்பர் மாத மத்தியில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.
தி வயர் நிறுவனத்திற்காக மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் அளவையும் மக்கள் தொகையின் பலதரப்பட்ட தன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலையையும் கருத்தில் கொண்டால், கரோனா பரவல் அதிகரிப்பது குறைவது போன்ற நிலைமை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
கரோனா பரவல் குறைவாக அல்லது மிதமாக உள்ளது. எனவே, கரோனா 'எண்டமிக்' கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்ததை போல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டுவில்லை" என்றார்.