இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் கரோனா உயிரிழப்புகளை விட அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் முதல் வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைப்பட்டுள்ளன. அபாயகரமாக அறுவை சிகிச்சைகளுக்கான மயக்க மருந்துகள் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதிதீவிர சிகிச்சைகளுக்கும் மருத்துவப் பொருள்களுக்கான தேவைகள் கிடப்பது சந்தேகம்தான் என்று இலங்கை மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், எரிபொருள், மருந்துகள், மருத்துவப் பொருள்கள், உணவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார சேவையும் பகுதியளவுக்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாவது, நாங்கள் (மருத்துவர்கள்) மிகவும் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். யார் சிகிச்சை பெற வேண்டும், யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை என்பதை மருத்துவகளான நாங்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இறக்குமதி மருந்து பொருள்களுக்கான பற்றாக்குறை காரணமாக யாருக்கும் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அடுத்த சில நாள்களில் மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றால், கரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.