மாஸ்கோ: நேட்டோ அமைப்பில் தங்களது அண்டை நாடுகளான ஸ்வீடனும் ஃபின்லாந்தும் இணைந்தால், பால்ட்டிக் கடல் பகுதியில் அணு ஆயுதங்களைக் குவிப்போம் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமித்ரி மெட்வதெவ் கூறியதாவது:
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைந்தால், அது எங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, நாங்கள் எங்களது ராணுவ வலிமையை மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகள் நேட்டோ உறுப்பினர்களான பிறகு, பால்ட்டிக் கடல் பகுதியை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
முன்னதாக, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், தங்களது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக ஸ்வீடனும் ஃபின்லாந்தும் அறிவித்திருந்தன.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அந்த நாட்டின் மீது ரஷியா படையெடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.