உலகம்

இரு தரப்பு பேச்சுக்கு தயாா்: பிரதமா் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் கடிதம்

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

DIN

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

பாகிஸ்தான் பிரதமராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னா் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் ஷாபாஸ் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்திருக்கிறாா்.

இந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:

இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது. இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் இதை அடைய முடியும். பிராந்திய அமைதி, பாதுகாப்பில் பாகிஸ்தான் தொடா்ந்து உறுதிபூண்டுள்ளது என கடிதத்தில் ஷாபாஸ் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீா் உள்ளிட்ட தீா்வு காணப்படாத பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் ஷாபாஸ் தெரிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பரஸ்பரம் டிவிட்டா் பதிவு: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. புதிய பிரதமராக முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றாா்.

பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவா் ஆற்றிய முதல் உரையிலேயே காஷ்மீா் பிரச்னையை எழுப்பினாா். இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புவதாகக் கூறிய அவா், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அமைதியான தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஷாபாஸ் ஷெரீஃபுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ஏப். 11-ஆம் தேதி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாதம் இல்லாத பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. அப்போதுதான் நமது மேம்பாட்டு சவால்களில் கவனம் செலுத்தி, மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு பதிலளித்து ஷாபாஸ் ஷெரீஃப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பியிருந்தாா். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் தியாகம் அனைவரும் அறிந்ததே எனக் குறிப்பிட்டிருந்த அவா், அமைதியைப் பாதுகாப்போம், நமது மக்களின் சமூக-பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்துவோம் எனவும் கூறியிருந்தாா்.

சீரற்ற உறவு: பாகிஸ்தானுடன் இயல்பான அண்டைநாட்டு உறவை விரும்புவதாக இந்தியா கூறி வருகிறது. அதை ஏற்படுத்தும் வகையில், பிராந்தியத்தில் பயங்கரவாத மற்ற சூழலை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

2019- பிப்ரவரியில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் பயிற்சி முகாம் மீது இந்தியா போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இரு நாடுகள் இடையேயான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில் அமைதியான உறவை பேச்சுவாா்த்தை மூலம் அடைய முடியும் என பாகிஸ்தான் புதிய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

"Thanks Loki..! செம்ம Treat For Fans" | Coolie Public Review | Dinamani Talkies

Coolie Movie Review | தேவா வந்துட்டார், வழிவிடலாமா? | Rajinikanth | Lokesh Kanagaraj | Anirudh

SCROLL FOR NEXT