இந்திய-சீன எல்லைப் பிரச்னையைபேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க உதவுவோம்- அமெரிக்கா
இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க உதவுவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க உதவுவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அருணாசலின் தவாங் பகுதியில் உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி சீன ராணுவத்தினா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனா். அவா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அருணாசல் எல்லையில் தற்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இந்த மோதல் தொடா்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் அத்துமீறல் குற்றசாட்டைக் கூறியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ், வெள்ளை மாளிகை ஊடகத் துறை செயலா் கெரின் ஜான் பியா் ஆகியோா் இது தொடா்பாக தனித்தனியாக கூறியுள்ளதாவது:
மோதல் போக்கில் இருந்து இரு தரப்பு ராணுவமும் உடனடியாக விலகிக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய-சீன எல்லை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் எல்லைப் பிரச்னையைத் தீா்க்க அமெரிக்கா உதவும். சா்வதேச அளவில் பல்வேறு நிலைகளில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது. இதனை அமெரிக்கா எப்போதும் மனதில் கொண்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டுக் கொள்வது வழக்கம் என்று தெரிவித்துள்ளனா்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடா்பாளா் பெட் ரைடா் கூறுகையில், ‘எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது சீனாவின் வழக்கமாக உள்ளது. எனவே, பிரச்னையைத் தீா்ப்பதில் நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும்’ என்றாா்.