அடுத்த ஆண்டு தான் தாத்தாவாகப் போகிறேன் என்று 2022ஆம் ஆண்டு நிறைவையும், 2023ஆம் ஆண்டை வரவேற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு தனது வாழ்வை நிறைவு செய்ததாகவும், பல நல்ல எதிர்பார்ப்புகளுடன் 2023ஆம் ஆண்டை எதிர்நோக்குவதாகவும் உணர்ச்சிவயப்பட்ட வார்த்தைகளுடன், ஒவ்வொரு மனிதனும் படித்து வரும் ஆண்டை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற திட்டத்தை உருவாக்கும் வகையிலும் பில் கேட்ஸ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது,
அக்டோபர் மாதத்தில் நான் 67 வயதை அடைந்தேன். இவ்வளவு வயதாகிவிட்டது என்பதை உணர கடினமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில், பலரும் இந்த வயதில் ஓய்வுபெற்றுவிட்டார்கள்.
ஆனால், பணி ஓய்வை அவ்வளவு எளிதில் தான் நாட மாட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடங்கியப் பணிகளை இன்னும் உத்வேகத்துடன் மேற்கொள்ளவிருக்கிறேன். அதாவது, எனக்குக் கிடைத்த செல்வங்களை எல்லாம், மீண்டும் இந்த சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் திருப்பியளிப்பதே அது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பற்றி கவலையில்லை. அவ்வாறு எனது செல்வங்களை நான் இந்த சமுதாயத்துக்கு திருப்பியளிக்கும் போது அந்த பட்டியலில் கீழே இறங்கலாம் அல்லது பட்டியிலிலிருந்து தூக்கி வீசப்படலாம். கவலையில்லை.
இதையும் படிக்க.. 2 ஆண்டுகளாக இருக்கும் பிஎஃப்.7 திரிபை திடீரென பூதாகரமாக்குவது ஏன்?
உலகம் முழுவதும் இருக்கும் சமத்துவமின்மையைப் போக்குவதாகவே எனதுசெயல்பாடு இருக்கும். எனது செல்வங்களை எல்லாம் இந்த சமுதாயத்தின் நல்லதுக்காக நிறைய மக்களுக்காக நான் திரும்ப அளிப்பது எனது கடமையாக உணர்கிறேன். ஆனால், இந்த உலகை நான் ஒரு புதிய கண்ணாடியில் பார்க்கத் தொடங்கினேன். எப்போது தெரியுமா? எனது மூத்த மகள், அடுத்த ஆண்டு நான் தாத்தாவாகப் போகிறேன் என்று என்னிடம் மிக மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னபோதுதான்.
வெறுமனே, நான் அடுத்த ஆண்டு தாத்தாவாகப் போகிறேன் என்று பதிவிடுவது என்னை உணர்ச்சிவயப்பட வைக்கிறது. இது எனது பணிக்கு மேலும் ஒரு புதிய பன்முகத்தைக் கொடுக்கிறது. எனது பேரக் குழந்தை இந்த உலகில் பிறக்கப் போகிறது என்பது குறித்து சிந்திக்கும் போது, மற்ற அனைவரின் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் இந்த உலகில் பிறக்கவும், செழிக்கவும் கூடுதலாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம் மேலும் அதிகரிக்கிறது.
இது மிக நீண்ட கால திட்டம். இதற்கு போதுமான பொறுமை தேவை. உலகை இன்னும் சமத்துவம் மிக்கதாக மாற்றும் முயற்சியில், வெற்றி என்பது ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களில் அளவிடப்படுகிறது. ஒருவேளை, வயது ஒன்றினால், இதனை புரிந்து கொள்ள எளிதாகிறது.நான் 20 வயதில் இருக்கும் போது, எனது தாத்தா பாட்டி வயதுடைய எவருக்கும், இந்த உலகை பயனுள்ளதாக மாற்றும் விஷயங்கள் இருப்பதாக நான் உணரவில்ல். ஆனால், நான் இப்போது வயதானவனாக மாறும்போதுதான், நான் எந்த அளவுக்கு தவறாக இருந்திருக்கிறேன் என்று புரிகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.