வாஷிங்டன்: மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை, 57 வயது நோயாளிக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வாஷிங்டனில் அமைந்துள்ள மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மேரிலேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவிட் பென்னெட் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகு மெல்ல குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது இதயம் சீராக இயங்கி, அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, அவர் இதயம் மற்றும் நுரையீரலை இணைக்கும் இயந்திரத்தின் உதவியோடு தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. எந்த நிராகரிப்பும் உருவாகவில்லை. எனவே அந்த இயந்திரத்திலிருந்து அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் எச்சரிக்கையுடன் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புது வாழ்வு அளிக்கும் வகையிலான சிகிச்சை முறையாக இது உள்ளது. உடலுறுப்பு தானங்கள் மூலம் மிகக் குறைவான உறுப்புகளே கிடைக்கும் நிலையில், இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உடலுறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சிகிச்சை முறை வெற்றி பெற்றால், ஏராளமானோருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.