இலங்கையில் மக்கள் போராட்டங்களையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதையும் படிக்க | இலங்கை போராட்டம்: இது எங்களது எதிர்காலத்திற்காக, போராட்டக்காரர்களுக்கு இலங்கை வீரர் ஆதரவு
இந்நிலையில் சனிக்கிழமை அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலையில் அசாதாரண சூழலின் மத்தியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பு உள்பட அரசின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசை அமைக்கும் பரிந்துரைக்கு ஆதரவளித்து பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.