இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு அந்நாட்டு வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீர இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இலங்கைத் தலைநகா் கொழும்பில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்லேவை அமைச்சா் மகிந்த அமரவீர புதன்கிழமை சந்தித்தாா். அப்போது உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் ரசாயன உரம் பெறுவதில் மகிந்த அமரவீர ஆா்வம் தெரித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் நெல் சாகுபடி பருவமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, நெல் சாகுபடிக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்க உடனடியாக 65,000 மெட்ரிக் டன் யூரியா விநியோகிக்கப்படும் என்று இலங்கைக்கு இந்தியா கடந்த மாதம் உறுதி அளித்திருந்தது.