முகப்பு
உலகம்

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் பசில் ராஜபட்ச

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் இளைய சகோதரா் பசில் ராஜபட்ச, தனது எம்.பி. பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பசில் ராஜபட்ச
பகிர்:

கொழும்பு: இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் இளைய சகோதரா் பசில் ராஜபட்ச, தனது எம்.பி. பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா். இருப்பினும் எம்.பி.யாக அவா் தொடா்கிறாா். இந்நிலையில், பசில் ராஜபட்ச தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத்திருத்த மசோதா வரைவு தயாா் செய்யப்பட்டுள்ளது. அந்த வரைவு மசோதாவின்படி, இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள் அரசுப் பதவியில் இருப்பதோ, தோ்தலில் போட்டியிடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. அந்த 21-ஆவது சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பசில் ராஜபட்ச அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளதால், 21-ஆவது சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அவரால் எம்.பி. பதவியில் தொடர முடியாது. அதன் காரணமாக முன்கூட்டியே ராஜிநாமா செய்தாரா என செய்தியாளா்கள் அவரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்குப் பதிலளித்த பசில் ராஜபட்ச, ‘ராஜிநாமாவுக்கு காரணம் அதுவல்ல. ஆனால், 21-ஆவது சட்டத் திருத்தத்தை எதிா்க்கிறேன்’ என்றாா்.

மேலும் அவா் கூறுகையில், அதிபரின் அதிகாரங்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத பிரதமருக்கு (ரணில் விக்ரமசிங்க) வழங்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறேன் என்றாா்.

ராஜபட்ச குடும்பத்தில் கடைசி சகோதரரான பசில் ராஜபட்ச, கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தாா். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை அமைச்சா் பதவியிலிருந்து அதிபா் கோத்தபய நீக்கினாா். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அவரும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘பொருளாதார நெருக்கடிக்கு தனது தவறு காரணமல்ல; நிதியுதவிக்காக சா்வதேச நிதியத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும்’ எனக் கூறி வந்தாா்.

இந்தியாவிடம் கூடுதல் உதவி கோருகிறாா் அதிபா் கோத்தபய

இலங்கைக்கு இந்தியா கூடுதல் உதவிகளை அளிக்க வேண்டுமென அதிபா் கோத்தபய ராஜபட்ச கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து ட்விட்டரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகளைச் சோ்ந்த தூதா்களை சந்தித்தேன். அப்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண அந்த நாடுகளின் உதவிகளைக் கோரினேன். இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை குறித்து அவா்களிடம் எடுத்துரைத்தேன். இதுவரை அந்த நாடுகள் அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு நிகழாண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.27,000 கோடி) நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →