உக்ரைனிலிருந்து வெளியேறிய 40 லட்சம் பேர்: ஐ.நா.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும்
நியூ யார்க்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்தலைவர் பிலிப்போ கிராண்டி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, உக்ரைனுக்கு தற்போதுதான் வந்துள்ளேன். லிவிவ் பகுதியில் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். தேவையற்ற இந்த போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எங்களது கூட்டு அமைப்புகளின் ஆதரவை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பன்னாட்டு அகதிகளுக்கான அமைப்பு (ஐஓஎம்), உக்ரைனிலிருந்து சென்ற 2,04,000 பேருக்கு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. மேலும் உக்ரைனிலிருந்து 23 லட்சம் பேர் போலந்துக்கும், பல ஆயிரக்கணக்கானோர் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement