வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, பல மணி நேரங்களுக்கு அங்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை முதல் டீசல் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுதந்திரம் பெற்றதற்கு பிந்தைய காலத்திலிருந்தே இம்மாதிரியான மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்ததே இல்லை. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு செலவழிப்பதற்கு கூட அந்நாட்டிடம் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை.
அங்கு பெரும்பாலான பேருந்துகளும் வணிக வாகனங்களும் டீசலை நம்பியே உள்ளது. இதனிடையே, இலங்கையில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் டீசல் கையிருப்பு இல்லாமல் உள்ளதாத செய்தி வெளி்யாகியுள்ளது. பெட்ரோல் விற்கபட்டாலும் அதுவும் பற்றாக்குறையிலேயே உள்ளது. இதன் விளைவாக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் திலும் அமுனுகம கூறுகையில், "பேருந்து பழுதுபார்க்கும் இடங்களில் பழுதுபார்ப்பதற்காக நிற்க வைக்கப்பட்டுள்ள பேருந்துகளிலிருந்து டீசலை எடுத்து மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்திவருகிறோம்" என்றார்.
இலங்கையில் மூன்றில் இரண்டு பேருந்துகள் தனியார் வசமே உள்ளது. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் டீசல் பற்றாக்குறை குறித்து கூறுகையில், "ஏற்கனவே, எண்ணெய் இல்லாமல் தான் உள்ளோம். அங்கும் இங்குமாய் கொஞ்சமாக கிடைக்கும் டீசல் கூட வெள்ளிக்கிழமைக்கு பிறகு கிடைக்காது" என்றனர்.
தனியார் பேருந்து இயக்க கூட்டமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் இன்னும் பழைய டீசலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இன்று மாலைக்குள் எங்களுக்கு கூடுதலான டீசல் கிடைக்கவில்லை என்றால், எங்களால் இயக்க முடியாது" என்றார்.
ஜெனரேட்டர்களுக்கு நிரப்பு கூட டீசல் இல்லாததால் இன்று முதல் 13 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்படும் என அரசு மின் வாரியம் அறிவித்துள்ளது.