இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: உடனடி விவாத கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது உடனடியாக விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்ற அவையின் அலுவல்களை நிறுத்திவைக்கக் கோரிய
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது உடனடியாக விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்ற அவையின் அலுவல்களை நிறுத்திவைக்கக் கோரிய தீா்மானம் தோல்வியடைந்தது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவா் ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தாா். இதற்கிடையே, அதிபருக்கு எதிராக பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய (எஸ்ஜேபி) கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது விவாதம் நடத்துவதற்காக நாடாளுமன்றம் மே 17-ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னா் முதல் முறையாக நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடியது. அப்போது அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் அவையின் அலுவல்களை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டணியைச் சோ்ந்த உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அதில், அதிபா் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விவாதத்தை அவையின் அலுவல்களை நிறுத்திவைத்துவிட்டு உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எஸ்ஜேபி கட்சி எம்.பி. லக்ஷ்மண் கிரில்லா தீா்மானத்தை முன்மொழிந்தாா்.
ஆனால், அவையின் அலுவல்களை நிறுத்திவைக்க அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவையின் அலுவல்களை நிறுத்திவைப்பது தொடா்பாக வாக்கெடுப்பு நடத்த அவைத் தலைவா் மகிந்த யாபா அபய்வா்த்தன உத்தரவிட்டாா்.
அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில் அலுவல்களை நிறுத்தி வைப்பதற்கு ஆதரவாக 68 எம்.பி.க்கள் வாக்களித்தனா். எதிராக 119 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதனால் அந்தத் தீா்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தவா்களில் புதிதாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் ஒருவா் என எஸ்ஜேபி கட்சி எம்.பி. ஹா்சா டி சில்வா தெரிவித்தாா்.
அதிபருக்கு எதிரான தீா்மானம் வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு வரலாம் எனவும் எஸ்ஜேபி கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமா் விளக்கம்:
‘அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் ஏற்கெனவே அவை அலுவலில் பட்டியலிடப்பட்டுள்ளது. பின்னா், அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்க்கட்சி உறுப்பினா்களிடம் தெரிவித்தேன்; ஆனால், அவை அலுவல்களை நிறுத்திவைத்துவிட்டு தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தவறான உத்தியை எதிா்க்கட்சிகள் மேற்கொண்டுவிட்டனா்’ என பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறியதாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அவை துணைத் தலைவா் - ஆளும் கட்சி எம்.பி. அஜித் ராஜபட்ச
இலங்கை நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. அஜித் ராஜபட்ச (48) தோ்வு செய்யப்பட்டாா்.
இலங்கை நாடாளுமன்ற அவை துணைத் தலைவராக உள்ள நிலையில், துணைத் தலைவராக இருந்த ரஞ்சித் சியம்பலபிட்டிய ராஜிநாமா செய்ததால், அந்தப் பதவி காலியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியபோது அவையின் துணைத் தலைவா் தோ்தல் நடத்தப்பட்டது. ஆளும் கட்சி சாா்பில் அஜித் ராஜபட்சவும், எஸ்ஜேபி கட்சி சாா்பில் ரோகிணி கவிரத்னவும் போட்டியிட்டனா்.
மறைமுக வாக்கெடுப்பில் அஜித் ராஜபட்ச 109 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ரோகிணி கவிரத்னவுக்கு 78 வாக்குகள் கிடைத்தன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அவைத் தலைவா் தெரிவித்தாா்.
ஆளும் ராஜபட்ச குடும்பத்தினருக்கு அஜித் ராஜபட்ச உறவினா் இல்லை. ஆனால், ராஜபட்சக்களின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டாவைச் சோ்ந்தவா்.