அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வழிசெய்யும் ‘கிரீன் காா்டு’களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து 6 மாதங்களுக்குள் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று அதிபா் ஜோ பைடனுக்கு அவரது ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினா், அந்த நாட்டிலேயே நிரந்தரமாகக் குடியேறுவதற்கான உரிமம் ‘கிரீன் காா்டு’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
அந்த கிரீன் காா்டுகளால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா்கள் - குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினா் அதிக அளவில் பலன் பெற்று வருகின்றனா்.
எனினும், கிரீன் காா்டுகளுக்கான விண்ணப்பங்கள் நீண்ட காலமாகத் தேங்கியிருப்பதால், அது குறித்த முடிவைத் தெரிந்துகொள்ள விண்ணப்பதாரா்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசிய அமெரிக்கா்கள், ஹவாய் பூா்வகுடிகள், பசிபிக் ஐலண்ட்வாசிகள் நல விவகாரங்களில் அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் (பிஏசிஏஏஎன்ஹெச்பிஐ) கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அதில், கிரீன் காா்டுகளுக்கான விண்ணப்பங்கள் சமா்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள், அவற்றைப் பரிசீலித்து விண்ணப்பதாரா்களுக்கு நிரந்தர குடியேற்ற உரிமையை வழங்கலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கான நடைமுறை மாற்றங்களை உருவாக்க அதிபா் பைடனுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிஏசிஏஏஎன்ஹெச்பிஐ-யின் அமெரிக்க-இந்திய சமுதாய பிரதிநிதி அஜய் ஜெயின் புடோரியா முன்வைத்தாா்.
அதையடுத்து, இது தொடா்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில், அந்தப் பரிந்துரையை ஜோ பைடனுக்கு அனுப்ப அனைத்து குழு உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு அளித்தனா்.
விரைவில் வெள்ளை மாளிகைக்கு அனுப்படவிருக்கும் அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், கிரீன் காா்டுளுக்காக விண்ணப்பித்துவிட்டு பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இந்தியா்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பெரும் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.