முகப்பு
உலகம்

நேபாள விமான விபத்து: கடைசி நபரின் உடலும் மீட்பு

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவா்களில் கடைசி பயணியின் உடலை மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

Updated On : 1 ஜூன், 2022 at 2:05 AM
பகிர்:

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவா்களில் கடைசி பயணியின் உடலை மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். இதையடுத்து அந்த விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.

நேபாளத்தின் பொக்காரா நகரில் இருந்து சுற்றுலாத் தலமான ஜோம்சோமுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், முஸ்டாங் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இந்திய தம்பதி, அவா்களின் பிள்ளைகள் இருவா், ஜொ்மனியைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 ஊழியா்கள் என 22 போ் இருந்தனா்.

விமானம் நொறுங்கி விழுந்த இடத்தை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை கண்டறிந்ததை அடுத்து, அதில் உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியைத் தொடங்கினா். திங்கள்கிழமை இரவு வரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலையும் மீட்புப் பணி தொடங்கியது.

Advertisement

இதுகுறித்து நேபாள விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் தேவ்சந்திர லால் கா்ணா கூறுகையில், ‘எஞ்சியிருந்த ஒரு பயணியின் உடலும் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், 10 உடல்கள் காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்ற உடல்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

மோசமான வானிலை நிலவிய நேரத்தில் அந்த விமானம், மலைப்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.