முகப்பு
உலகம்

அமெரிக்க ஜனநாயகத்தின் கருப்பு தினம்; பேச மறுக்கும் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மக்களிடையே வியாழக்கிழமை உரையாற்றவுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்
பகிர்:

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் தோல்வி அடைந்தார். இதையடுத்து, 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, நாடாளுமன்றம் கூடி தேர்தலில் வெற்றி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனுக்கு சான்றிதழ் வழங்கவிருந்தது. அப்போது, அவரது ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். 

ஜனநாயகத்தின் தாயகமாக திகழும் அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு தினமாக அமைந்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், ஃபுளோரிடாவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கலந்து கொள்வதாக இருந்தது. 

இந்நிலையில், அத்திட்டத்தை அவர் ரத்து செய்துள்ளார். ஆனால், முன்னதாக, திட்டமிட்டபடி, அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் நாட்டு மக்களிடையே வியாழக்கிழமை உரையாற்றவுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்வது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிரம்ப், "கடந்த 2020 அதிபர் தேர்தலில், மோசடி நடைபெற்றதன் காரணமாகவே ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனிடம் தோல்வி அடைந்தேன். இது நூற்றாண்டின் குற்றம். ஓராண்டு நிறைவு பெற்ற பிறகும், அரசியல காயங்கள் இன்னும் ஆறவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற மண்டபத்திலிருந்து அதிபர் மற்றும் துணை அதிபர் உறையாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளைமாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், "அதிபராக பைடன் பொறுப்பேற்று கொண்டதிலிருந்தே, அரசியல் சுதந்திரத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து அவர் எச்சரித்துவந்துள்ளார். தற்போது வரை, அமெரிக்கர்கள் அதை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில், அவர் ஆற்றவுள்ள உரையில் இதுகுறித்து தீவிரமாக பேசுவதற்கு வாய்ப்புண்டு. ஓராண்டு பிறகு அது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தியுள்ளது என ஜனவரி 6ஆம் தேதியின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுள்ளார்" என்றார்.

செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு நிலையில், அரிசோனாவில் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் பேரணியில், பைடனின் பேச்சுக்கு டிரம்ப் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.