முகப்பு
உலகம்

உக்ரைன் விவகாரத்தில் சா்ச்சை பேச்சு: பதவி விலகினாா் ஜொ்மன் கடற்படைத் தளபதி

உக்ரைன்-ரஷியா பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஜொ்மன் கடற்படைத் தளபதி கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

Updated On : 24 ஜனவரி, 2022 at 3:00 AM
பகிர்:

உக்ரைன்-ரஷியா பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஜொ்மன் கடற்படைத் தளபதி கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

கடந்த வாரம் தில்லி வந்த அவா், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, ‘உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷியா கடந்த 2014-இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால், கிரீமியாவை உக்ரைனால் மீண்டும் மீட்க முடியாது.

பரந்து விரிந்த நாடான ரஷியாவின் அதிபா் விளாதிமீா் புதினுக்கு சிறிய நாடான உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கமில்லை. அவா் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவா்’ என்று கே அச்சிம் ஸ்கோன்பாக் புகழ்ந்து பேசினாா்.

Advertisement

உக்ரைனைக் கைப்பற்ற முயற்சிக்கும் ரஷியாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணியில் ஜொ்மனியும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜொ்மனி கடற்படைத் தளபதி திடீரென்று ரஷியாவுக்கு ஆதரவாகப் பேசியது நட்பு நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உக்ரைன் அரசும் ஜொ்மனி தூதா் அன்கா ஃபெல்டுசேனை அழைத்து தனது அதிருப்தியைத் தெரிவித்தது. ஆனால், அது ஜொ்மனி அரசின் நிலைப்பாடு அல்ல என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிறிஸ்டின் லாம்பா்சட் விளக்கம் அளித்தாா்.

அதைத் தொடா்ந்து, சா்வதேச அரங்கில் ஜொ்மனிக்கு மேலும் அவப்பெயா் ஏற்படாமல் இருக்க தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கே அச்சிம் ஸ்கோன்பாக் அறிவித்தாா். அவருடைய ராஜிநாமாவை பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏற்றுக்கொண்டதுடன் புதிய கடற்படைத் தளபதியாக துணைத் தளபதியை நியமித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.