முகப்பு
உலகம்

மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?

மாலத்தீவுக்குச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 ஜூலை 2022, 4:09 pm IST
கோத்தபய ராஜபட்ச
பகிர்:

மாலத்தீவுக்குச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்து ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில், ரணிலும், அதிபர் கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்று கடந்த வாரம் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அதிபர் பதவியை இன்று ராஜிநாமா செய்வதாக அறிவித்த கோத்தபய அதிகாலை அன்டோனோவ்-32 என்ற ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் ஒரு பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு சென்றார்.

இந்நிலையில், மாலத்தீவில் கோத்தபய இருப்பதை அறிந்த மக்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கோத்தபயவை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கைக்கே அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து, வேறு நாட்டிற்குச் செல்ல கோத்தபய தரப்பிலிருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மாலத்தீவிலிருந்து ராஜபட்ச கிளம்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சிங்கப்பூருக்குச் செல்லும் கோத்தபய, அங்கிருந்து துபை செல்லவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிபர் பதவியை இன்று ராஜிநாமா செய்வதாக அறிவித்த கோத்தபய, இடைக்கால அதிபராக ரணிலை நியமித்துவிட்டு வேறு நாட்டிற்கு தப்பியுள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது அதிபர் பதவியை வைத்து ஏதேனும் ஒரு நாட்டில் பாதுகாப்பாக தஞ்சமடைந்த பிறகே ராஜிநாமா கடிதத்தை முறைப்படி கோத்தபய வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.