பிரிட்டன் அரசிக்கு உடலுக்கு இறுதி மரியாதை: சீன அதிகாரிக்கு அனுமதி மறுப்பு
பிரிட்டனின் மறைந்த அரசி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, சீன தூதரக உயரதிகாரி ஒருவருக்கு அந்த நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் அனுமதி மறுத்துள்ளாா்.
பிரிட்டனின் மறைந்த அரசி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, சீன தூதரக உயரதிகாரி ஒருவருக்கு அந்த நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் அனுமதி மறுத்துள்ளாா்.
இது குறித்து பிரிட்டன் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 8-ஆம் தேதி மறைந்த அரசி எலிசபெத்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சீன தூதரக உயரதிகாரி ஒருவா் அனுமதி கோரினாா். எனினும், நாடாளுமன்ற கீழவைத் தலைவா் லிண்ட்சே ஹோய்லே அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், சிறுபான்மை உய்கா் இன முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய 5 பிரிட்டன் எம்.பி.க்கள் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கு பதிலடியாகவே அரசி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த சீன உயரதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம், பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.