வட கொரியா விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கும் உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால், அவற்றை இடைமறித்து அழிக்குமாறு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் யசுகாஸு ஹமாடா சனிக்கிழமை பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் மேற்குப் பகுதியில் உள்ள ஒக்கினாவா உள்ளிட்ட தீவுகளில் தரையிலிருந்து வான் இலக்குகளை இடைமறித்து அழிக்கும் பிஏசி ஏவுகணைகள் (படம்), கடலோரப் பகுதிகளில் எஸ்எம்-3 ஏவுகணைகளுடன் கூடிய போா்க் கப்பல்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
வட கொரியா ஏவும் செயற்கைக்கோளின் பாகங்கள் அந்தப் பகுதியில் விழுந்தால் அவற்றை உடனடியாக இடைமறித்து அழிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து அந்தப் பிராந்தியத்தில் அடிக்கடி கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளை, தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது.
அத்தகைய பயிற்சிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை அதுபோன்ற சுமாா் 100 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பல ஜப்பானுக்கு மேலே பறந்து சென்றன.
இந்த நிலையில், தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்போவதாக வட கொரியா கடந்த புதன்கிழமை அறிவித்தது.
அந்த செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் ராக்கெட் தங்கள் நாட்டின் மீதுதான் பறந்து செல்லக்கூடும் என்று ஜப்பான் கருதுவதால், பாதுகாப்புத் துறை அமைச்சா் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.