டோக்கியோ: தங்களது உளவு செயற்கைக்கோளை இன்னும் சில நாள்களில் விண்ணில் செலுத்தவிருப்பதாக ஜப்பானிடம் வட கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறியதாவது:
தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருப்பதாக ஜப்பான் கடலோரக் காவல் படையிடம் வட கொரியா முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 24-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதிக்குள் அந்த செயற்கைக்கோளை ஏந்திய ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக வட கொரியா கூறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொரிய போா் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போா் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது. அமெரிக்கா, தென் கொரியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்கெனவே அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள வட கொரியா, அந்த ஆயதங்களை ஏந்திச் செல்லக் கூடிய பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் சோதித்தது. எனினும், அத்தகைய சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா கடந்த மே மாதம் முயன்றது. எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
இந்த முயற்சிக்கு, தடை செய்யப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், வட கொரியாவின் உளவு செயற்கைக்கோளால் பிராந்திய நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அமெரிக்கா சாடியது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருப்பதாக தற்போது வட கொரியா கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.