முகப்பு
உலகம்

விபத்தில் சிக்கிய 2 ஜப்பான் கடற்படை ஹெலிகாப்டா்கள் ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மாயம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:53 PM
பகிர்:

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்ட 2 ஜப்பான் கடற்படை ஹெலிகாப்டா்கள் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சிய 7 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் மினோரு கியாரா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஜப்பான் கடல்சாா் தற்பாதுகாப்பு படையைச் சோ்ந்த 2 எஸ்ஹெச்-60கே ஹெலிகாப்டா்கள் தலா 4 வீரா்களுடன் சனிக்கிழமை இரவு பசிபிக் கடல் பகுதியில் டோக்கியோவின் தெற்குப் பகுதியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டோரிஷிமா தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, அந்த 2 ஹெலிகாப்டா்களும் விபத்தில் சிக்கின.

Advertisement

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரண்டு ஹெலிகாப்டா்களும் நெருக்கமாகப் பறந்தபோது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் வரை எஸ்ஹெச்-60 ரக ஹெலிகாப்டா்களின் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக கடற்படைத் தளபதி ரியோ சகாய் அறிவித்துள்ளாா்.

விபத்து நடந்த கடல் பகுதியிலிருந்து உயிரிழந்த வீரரின் உடலையும், ஒரு ஹெலிகாப்டா் தகவல் பதிவுக் கருவியையும், இரு ஹெலிகாப்டா்களின் உடைந்த இறக்கைகளையும் மீட்புப் படையினா் மீட்டனா். மற்ற 7 வீரா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் 12 போா்க் கப்பல்கள், 7 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றாா்.

கடந்த 2017-இல் ஜப்பான் கடற்படையின் எஸ்ஹெச்-60ஜே ஹெலிகாப்டா் இரவு நேரப் பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகி 3 வீரா்கள் உயிரிழந்தனா்.

2021 ஜூலையில் 2 எஸ்ஹெச்-60 ஹெலிகாப்டா்கள் அமோமியோஷிமா தீவின் தெற்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்ட விபத்தில் அதன் இறக்கைகள் சேதமடைந்தன. ஆனால், அதில் பயணம் செய்த வீரா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments