முகப்பு
உலகம்

ஆசியாவை புரட்டிப் போட்ட கனமழை; 250-க்கும் அதிகமானோர் பலி!

மழை தொடர்பான பேரிடரால் ஆசியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 8:13 pm IST
- படம் | AP
பகிர்:

மழை தொடர்பான பேரிடரால் ஆசியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா மற்றும் சீனாவில் பெய்த கனமழை காரணமாக 250-க்கும் அதிகமானோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வட கொரியாவிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மழை, வெள்ளப் பெருக்கினால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்கள் தொடர்பாக எந்த ஒரு தரவுகளும் வட கொரியா தரப்பில் வெளியிடப்படவில்லை.

- படம் | AP

ஆசியாவில் பருவமழையும் சூறாவளியும் தீவிரமடைந்துள்ளன. பருவநிலை மாற்றம் சூழலை மேலும் கடினமாக்கியுள்ளது. கனமழை காரணமாக வெள்ளம், விளைபயிர் சேதம், வீடுகள் அழிவு மற்றும் உயிரிழப்புகள் என மக்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சீனாவை கடந்த சில நாள்களாக வெப்பநிலை மற்றும் கனமழை புரட்டியெடுத்து வருகிறது. அதிகப்படியான வெப்பம் மற்றும் கனமழையை எதிர்கொள்ள சீன அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்தியா: 201 பேர் பலி, 200 பேருக்கு அதிகமானோர் மாயம்

கேரளத்தின் வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்கள் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் ஆற்றில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது நிலச்சரிவின் தீவிரத்தைக் காட்டுகிறது.

- படம் | AP

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு, ஏலக்காய் தோட்டத்துக்கு பெயர் பெற்றது. நிலச்சரிவுக்குப் பிறகு அந்த இடம் முழுமையாக அழிவுக்குள்ளாகியுள்ளது. இந்த தோட்டங்களைச் சுற்றி வாழ்ந்தவர்கள் பலரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சீனா: 48 பேர் பலி, 35 பேர் மாயம்

கேமி சூறாவளியால் பிலிப்பின்ஸில் 30 பேரும், தைவானில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சூறாவளியின் காரணமாக சீனாவின் ஹுனான் மகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடந்த வாரம் பிரபல பொழுதுபோக்கு இடமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்த 15 பேர் உயிரிழந்தனர்.

ஷி ஜிங்க் நகரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- படம் | AP

இந்த ஓராண்டில் மட்டும் சீனாவில் 25 மிகப் பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் அதிக எண்ணிக்கை என நீர்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா: இறப்பு தகவல் இல்லை

வட கொரியாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை வெள்ளத்தால் 4,100-க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3,000 ஹெக்டேருக்கும் அதிகமான அதிகமான விளைநிலங்கள் வெள்ளத்தால் மூழ்கி நாசமாகியுள்ளன. வட கொரியாவின் பொதுக் கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே மிகப் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.

- படம் | AP

கனமழை வெள்ளத்தால் வட கொரியா பேரிழப்பை சந்தித்தபோதிலும், இதுவரை உயிரிழப்புகள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வட கொரியா அரசு வெளியிடவில்லை.

பாகிஸ்தான்: 3 பேர் பலி

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக லாகூரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்துக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கனமழை வெள்ளத்தை சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பஞ்சாப் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் நீர் புகுந்துள்ளது. வெள்ள நீர் மருத்துவமனைக்குள் புகுந்ததால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.