பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வலதுசாரி கட்சிகளின் அழுத்தத்தில் இருந்து தனது மீதி பதவிக்காலத்தை காத்துகொள்ள புதிய தொடக்கமாக பிரான்ஸின் மிக இளவயது பிரதமரை அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர். பிரதமர் உள்நாட்டு கொள்கைகளுக்கும் அமைச்சரவை ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பாவார்.
முன்பு இந்தப் பதவியில் இருந்த எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
34 வயதான கேப்ரியல் அட்டல் பிரான்ஸின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். அந்த நாட்டின் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த கேப்ரியல், தன்னை வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளராக அறிவித்துக் கொண்டார்.
பிரான்ஸின் முதல் திருநர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். முன்பு பொதுவுடைமை கட்சியில் இருந்தவர், 2016-ல் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிரான்ஸின் கெளரவமிக்க பதவியான கல்வி அமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் ஹிஜாப் போன்ற நீண்ட ஆடைகள் மாணவர்களிடையே மதச்சார்பின்மையைப் பாதிப்பதாகக் கூறி தடை செய்தார்.
சில பொது பள்ளிகளில் சீருடை திட்டத்தையும் முன்னெடுத்தார். “உங்களது ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் கவனத்தில் கொண்டுள்ளேன்” என அதிபர் மேக்ரான் தனது எக்ஸ் பதிவில் கேப்ரியல் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நடுவானில் தெறித்த விமானக் கதவு: இதுதான் காரணமா?
குடியேற்ற மசோதா பிரான்ஸ் நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வெளியேற செய்யும் அரசின் திறனை இன்னும் வலுவாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு கடுமையான விவாதங்கள் அவையின் நடந்தன. பொதுவுடைமை சார்புடைய அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகினார்.